• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!

ByP.Kavitha Kumar

Jan 6, 2025

தமிழ்நாடு சட்டசபை முதல் கூட்டம் இன்று(ஜனவரி 6) தொடங்குகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்..

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக உள்ளது. அந்த வகையில், இன்று கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்.. இதற்காக அவர் காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்படுகிறார். அவருக்குசட்டசபை தலைவர் அப்பாவு, முதன்மைச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச்செல்வார்கள்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் ஆளுநரின் உரை சுமார் 45 நிமிடங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. அதனைத்தொடர்ந்து, அவரது உரையை தமிழில் பேரவை தலைவர் வாசிப்பார். அத்துடன் கூட்டம் நிறைவடையும். அதனைத்தொடர்ந்து, பேரவை தலைவர் அறையில், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமீபத்தில் மரணம் அடைந்தார்., நாளை (ஜனவரி 7) நடைபெறும் கூட்டத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். அடுத்த 2 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து அதிமுக., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பாக எடுத்துக்கொண்டு விவாதிக்க கடிதம் கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.