• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது..!

Byவிஷா

Oct 17, 2023

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் குழந்தை விற்பனை விவகாரத்தில் பெண் அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் – நாகஜோதி தம்பதி. இவர்களுக்கு கடந்த7ஆம் தேதி 3வதாக பெண் குழந்தை ஒன்று அவர்கள் வாழும் பகுதி நகர மருத்துவமனையில் பிறந்துள்ளது. அண்மையில் அந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தம்பதியினர் அந்த குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்குள்ள மகப்பேறு பெண் மருத்துவர் அனுராதா என்பவர் சிகிச்சை பார்த்துள்ளார். அதன் பிறகு லோகம்மாள் என்பவர் தம்பதியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
லோகம்மாள் தம்பதியினரிடம், குழந்தை நலம், 3வதும் பெண் குழந்தை என்றெல்லாம் பேச்சு கொடுத்து, இறுதியாக பெண் குழந்தை விற்பனை பற்றி பேசியுள்ளார் . இதில் சந்தேகமடைந்த தினேஷ் – நாகஜோதி தம்பதி உடனடியாக காவல்துறையினரிடம் நடந்தவற்றை கூறி புகார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் லோகம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த விசாரணையில், ஏழை பெண் குழந்தைகள், அவர்கள் பெற்றோர் பற்றிய விவரங்களை லோகம்மாளுக்கு வழங்குவது மகப்பேறு மருத்துவர் அனுராதா தான் என்றும், இதுவரை சுமார் 10 குழந்தைகளை இவ்வாறு விற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அரசு மகப்பேறு மருத்துவர் அனுராதாவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விற்கப்பட்ட குழந்தைகள் பற்றி காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், காவல்துறையினர் மேலும் ஒரு இடைத்தரகரை கைது செய்துள்ளனர். குமாரபாளையத்தை சார்ந்த இடைதரகர் பாலாமணி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.