நள்ளிரவில் வீட்டின் கேட்டை, கதவை உடைத்து உணவு பொருட்களை தேடிய குட்டியுடன் வந்த யானை, யானையை பார்த்து அலறி அடித்து மாடிக்கு ஓடிய குடும்பத்தார்.
கோவை, மருதமலை வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கும் உணவு தேடி உலா வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையிலே கோவை, மருதமலை, ஐ.ஓ.பி காலனி பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு யானை தன் குட்டியுடன் வந்து, அங்கு உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து வீட்டில் வளர்க்கப்பட்ட அலங்கார தாவரங்களை உட்கொண்டது.
அதன் பின்னர் வீட்டின் கதவை உடைத்து தும்பிக்கையை உள்ளே விட்டது. உணவுப் பொருட்களை தேடியது . நள்ளிரவு யானை வந்ததை பார்த்து, கதவை உடைக்கும் சத்தத்தை கேட்டு குடும்பத்தார், பதறி அடித்து மாடி அறைகளுக்கு ஓடினர் . யானைகள் சிறிது நேரம் கழித்து அங்கு இருந்து வனப் பகுதிக்கு சென்றது . ஐ.ஓ.பி காலனி பகுதியில் அவ்வப் போது யானைகள் நள்ளிரவில் உலா வருவதால் பொதுமக்கள் பீதியில் உரைந்து இருக்கின்ற நிலையில், வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் வருவதை தடுத்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.