தமிழ்ப்புத்தாண்டு குரோதி வருட சித்திரை மாதம் முதல் தேதி பிறப்பையொட்டி அதிகாலை முதல் மாலைவரை, அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் உள்ள மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, வித்தக விநாயகர், மற்றும் வேல்சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும், உற்சவர் சுவாமிக்கு பால்,பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தேன், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் குவிந்து நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் பெருமாள், உபசன்னதிகள். மற்றும் காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி ஆகிய கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். விடுமுறைநாள் என்பதாலும், பக்தர்கள் கூட்டம் காலையிலிருந்து மாலைவரை குறைவில்லாமல் காணப்பட்டது.
பக்தர்கள் தரிசன ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் கலைவாணன், மற்றும் அறங்காவலர் குழுவினர், கண்காணிப்பாளர், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.