• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கடந்த 2011 -16ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த போது, வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான டிஜிட்டல் உள்ளிட்ட ஆதார ஆவணங்களை வழங்க தமிழக போலீசாருக்கு உத்தரவிட கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜராக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு சில ஆதார ஆவணங்கள் தேவைப்படுகிறது எனவும் அதை போலீஸ் தரப்பில் கேட்டபோது வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா, போலீஸ் தரப்பில் உள்ள அனைத்து ஆதாரங்களும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களைப் பெற சிறப்பு நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.