• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆன்மீக சுற்றுலா செல்ல அழைக்கிறது …ரயில்வே

ByA.Tamilselvan

Nov 6, 2022

கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு மதுரை – காசி இடையே சுற்றுலா ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்களை தரிசிக்க இந்திய ரயில்வே பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது.
அந்தவகையில், அடுத்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் வரும் 18-ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக முதலில் விஜயவாடா செல்கிறது. பின்பு நவம்பர் 19 அன்று உத்தரப் பிரதேசம் மாணிக்பூர் சித்திரக்கூடம் சென்று நவம்பர் 20 அன்று (சர்வ ஏகாதசி தினம்) ராம்காட்டில் புனித நீராடி குப்த கோதாவரி குகை கோயில், காம்தகரி, சதி அனுசுயா கோயில்களில் தரிசனம். பின்னர் நவம்பர் 21 பிரதோஷ தினத்தன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ராமஜன்ம பூமி கோவில் தரிசித்து நவம்பர் 22 சிவராத்திரி தினத்தன்று காசி கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோயில்களில் தரிசனம். நவம்பர் 23 சர்வ அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்கள் வழிபாடு முடிந்து விஷ்ணு பாத தரிசனம்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 24 அன்று ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் ஆலயம், கொனார்க் சூரியனார் கோயில் தரிசனம். நவம்பர் 26 அன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 21 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் என முடிந்து நவம்பர் 27 அன்று சுற்றுலா ரயில் மதுரை வந்து சேரும். பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயிலுக்கான பயணச் சீட்டுகளை www.ularail.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.