• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வைகை ஆற்றில் தவறி விழுந்த நபரை, தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது.

ByKalamegam Viswanathan

Aug 7, 2023

மதுரை விளாங்குடி பாத்திமாக் கல்லூரி அருகில், இன்று மாலை இருட்டிய பிறகு, வைகை ஆற்றினுள் 40 வயது மதிக்கத் தக்க நபர் தவறி விழுந்து, ஆகாயத் தாமரை செடிகளுக்குள் சிக்கி கிடப்பதாக அந்த வழியே சென்றவர்கள் தீயணைப்பு கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் உயிர் காக்கும் கருவிகளோடு ஆற்றினுள் இறங்கி, அந்த நபரை உயிருடன் மீட்டு மேலே தூக்கி வந்தனர். குடிபோதையில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்த, சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு போலீசார்க்கு, அவர் குடிபோதையில் இல்லை என்பதும், அவர் மன நிலைப் பாதிக்கப்பட்டு, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து, சாலையோரம் வசிப்பவர் எனத் தெரிய வந்தது.

வழக்குப் பதிவு செய்த கரிமேடு போலீசார், அவரை ஆதரவற்றோர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், விளாங்குடி வைகை ஆற்றுப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு, போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.