அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. பலரும் பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான முதன்மை நிலை பள்ளி ஒன்று அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வந்துள்ளனர். இதில், 30 வயதுடைய ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும், 6 வயது சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில்,ஆத்திரம் அடைந்த சிறுவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியையை நோக்கி ஒரு சுட்டுள்ளான். இந்த தாக்குதலில் ஆசிரியை பலத்த காயமடைந்து உள்ளார். உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில், அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.