நாகை அரசு மாதிரி பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர் உயிரிழந்தார். மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காட்டுநாயக்கன் தெரு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் – ரேவதி தம்பதியினரின் மகன் சஞ்சய்ராம். இவர் நாகப்பட்டினம் உள்ள வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் செயல்படும் அரசு மாதிரி பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சஞ்சய்ராமின் தந்தைக்கு விடுதி வார்டன் உங்களது மகன் விடுதியில் மயங்கி விழுந்து விட்டதாகவும், நாகை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக வரவேண்டும் எனவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மருத்துவமனைக்கு சென்று ராமச்சந்திரன் பார்த்த போது, அவருடைய மகன் சஞ்சய்ராம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. தொடர்ந்து உயிரிழந்த மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். விடுதியில் இருந்த மாணவர் சஞ்சய்ராம் தடுக்கி விழுந்ததில் உயிரிழந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே தன்னுடைய மகனுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை என்று வேதனையுடன் கூறியுள்ள மாணவனின் தாய் ரேவதி, மகன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மருத்துவமனையில் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். நாகையில் மாதிரி பள்ளி மாணவர் விடுதியில் தடுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
