• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தப்பிச் சென்ற ராஜபக்சவின் குடும்பம்… உயிருக்கு உத்திரவாதமில்லா நிலையில் இலங்கை

Byகாயத்ரி

May 10, 2022

இலங்கையில் வலுக்கும் வன்முறை பேராட்டங்களுக்கு மத்தியில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டு வாயில்களை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆயுதம் ஏந்திய படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பிச்செல்லும் காட்சிகள் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி காரணமாக பல வாரங்களாக நடைபெற்ற போராட்டங்களினால் மோசமான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மனித உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியேறும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய வீர்ரகள் வெளியேற்றியுள்ளனர். கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ டெம்பிள் ட்ரீஸ் இல்லத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், ராஜபக்ச தனது குடும்பத்துடன் தங்கியிருந்த பிரதான இரண்டு மாடி கட்டிடத்தை செவ்வாயன்று முற்றுகையிட முயன்றனர்.

“விடியலுக்கு முந்தைய நடவடிக்கைக்குப் பிறகு, முன்னாள் பிரதமரும் அவரது குடும்பத்தினரும் ராணுவத்தால் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்” என்று உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். “குறைந்தது 10 பெட்ரோல் குண்டுகள் வளாகத்தில் வீசப்பட்டன.” என்றும் அவர் தெரிவித்தார். 1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து தீவு நாடான இலங்கை எதிர்கொள்ளும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், அங்கு பல வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் 76 வயதான தலைவர் திங்களன்று ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த ராஜினாமா, ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய சர்வ வல்லமை படைத்த ராஜபக்சே குலத்தின் திடீர் வீழ்ச்சியாக பார்க்கப்பட்டது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டு சுமார் 200 பேர் காயமடைந்துள்ள நிலையில், தற்போது முன்னாள் பிரதமர் ஒரு ரகசிய இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அரசு அதிகாரத்தின் முக்கிய அடையாளமான காலனித்துவ கால கட்டிடத்தின் மூன்று நுழைவாயில்களிலும் எதிர்ப்பாளர்களை தடுத்து நிறுத்துவதற்கு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை சரமாரியாக வீசியதாகவும், காற்றில் எச்சரிக்கைக்காக துப்பாக்கிகளை சுட்டதாகவும் பாதுகாப்பு அதிகாரி கூறினார்.