உணவு பற்றாக்குறையை சமாளிக்க இலங்கை அரசு ரூ.7,500 கோடி கடனாக தருமாறு இந்தியாவிடம் கேட்டுள்ளது. கொரோனாவால் சுற்றுலா துறை முடங்கியுள்ளதால் இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. நிலைமையை சமாளிக்க இலங்கை அரசு கடனுக்கு மேல் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தை மேம்படுத்த வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல், அந்த துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. ஈரானிடம் வாங்கிய கச்சா எண்ணெய்க்கு பணத்தை தர முடியாமல் தேயிலையை கொடுத்து சமாளித்து வருகிறது. இந்நிலையில், இன்னும் 2 மாதத்தில் நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறை வரும் என அந்நாட்டு விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய போதிய அமெரிக்க டாலர்களும் இலங்கை அரசிடம் கைவசம் இல்லை.அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்காக இலங்கையின் மத்திய வங்கி தங்க கையிருப்பில் பாதிக்கு மேல் விற்க அனுமதி தந்தது. அதன்படி, இலங்கையின் தங்கம் கையிருப்பு ரூ.2,865 கோடியில் இருந்து ரூ.1,312 கோடியாக சரிந்தது. இந்நிலையில், உணவுப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய, ரூ.7,500 கோடியை கடனாக தரும்படி இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்டுள்ளது. இது குறித்து இலங்கையின் மத்திய வங்கி ஆளுரந் அஜித் நிவாரத் கேப்ரால் அளித்த பேட்டியில், ‘‘இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பணம் உணவு இறக்குமதிக்கு மட்டுமே செலவிடப்படும்,’’ என்றார்.
ஏற்கனவே சீனாவிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல், கடன் தவணைகளை மாற்றித் தரும்படி கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை வந்த சீன வெளியுறவு அமைச்சரிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.