சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கணவாய் செய்யது வருசை இப்ராஹிம் சாகிப் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி சனிக்கிழமை காலை தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது.

நேற்றைய முன்தினம் இரவு தர்காவிலிருந்து முத்தவல்லி டிரஸ்டி கணவாய் பிச்சை, செயலாளர் நாகூர் மீரான், பொருளாளர் ஆஸாத் என்ற நாகூர்மீரான், துணை முத்தவல்லி சேட்பஷீர், துணைச் செயலாளர்கள் முகமதுயாசின், செய்யது, நிஜாமுதீன், ஆலோசகர் மவ்லான மவ்லவி முகமதுமன்சூர்அலி நூரி ஆகியோர் முன்னிலையில் சந்தனக்கூடு விழா விடிய விடிய நடைபெற்றது.

இதில் மதுரை, திருநெல்வேலி,திருச்சி,ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர்,தேனி, திண்டுக்கல், உள்பட 20 மாவட்டங்களில் இருந்து இஸ்லாமிய பெருமக்கள் குவிந்தனர். இப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்களும் இந்த சந்தனக்கூடு திருவிழாவில் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி அன்று சந்தனக்கூடு திருவிழா வந்திருப்பதால் மாவட்ட கண்காணிப்பாளர் தேவநாதன் உத்தரவின் பேரில் சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் ஆலோசனை பேரில் காடு பட்டிஇன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவலர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சந்தனக்கூடு திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட சேவல்கள் நேர்த்தி கடனுக்காக வழங்கப்பட்டது. சக்கரை வைத்து பார்த்தியா கொடுக்கப்பட்டது. பில்லி சூனியம் உள்ளவர்கள் மயில் தோகையில் மந்திரிக்கப்பட்டு குணமடைந்ததாக கூறுகின்றனர். அவ்வாறுகுணம் அடைந்தவர்கள் அருகில் தீபம் ஏற்றி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். பலர் முடி காணிக்கையும் செலுத்தினார்கள்.









