பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தந்தை உக்கிரபாண்டி தேவரின் இரண்டாவது மனைவி வழிவந்த வாரிசுதாரர்கள் முத்துராமலிங்கத் தேவர் கோவில் மற்றும் சொத்து தொடர்பாக வழக்கு நடத்தி வந்த நிலையில் அண்மையில் வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகத்தில் உரிமை உள்ளதென உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கிய நிலையில் அதனை வருகிற தேவர் குருபூஜை முதல் நடைமுறைப்படுத்த உக்கிரபாண்டி தேவரின் இரண்டாவது மனைவி நாகம்மாள் வாரிசு இந்திராணி மற்றும் முத்துரத்தினம் வகையறாவினர் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

இது தொடர்பாக இந்திராணி மற்றும் முத்துரத்தினம் வகையறா தரப்பு வழக்கறிஞர் ராமமூர்த்தி கூறுகையில்:
விடுதலைப் போராட்ட வீரரும் ஆன்மீகத் தலைவருமான பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் நேரடி வாரிசுதாரர்கள் தொடர்பான நீண்டகால சட்டப் போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. முத்துராமலிங்க தேவரின் தந்தையான உக்கிரபாண்டி தேவருக்கு இரண்டு மனைவிகள் ஆவர். முதல் மனைவி இந்திராணி அம்மையாரின் ஒரே மகனான முத்துராமலிங்க தேவர் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து மறைந்த நிலையில், உக்கிரபாண்டி தேவரின் இரண்டாவது மனைவி நாகம்மாளின் மகள் இந்திராணியின் வாரிசுகளான நாகூர்கனி மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோரின் வழியினரே தேவரின் நேரடி வாரிசுதாரர்கள் ஆவர்.

கடந்த 1993-ஆம் ஆண்டு ராமநாதபுரம் சப்-கோர்ட் வழங்கிய வாரிசு உரிமைத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், நாகம்மாள் வழியினரே முத்துராமலிங்க தேவரின் உண்மையான நேரடி வாரிசுதாரர்கள் என்றும், அவரது சொத்துக்கள் அனைத்தும் இவர்களுக்கே பாத்தியப்பட்டது என்றும் தீர்ப்பளித்துள்ளார். மேலும், பசும்பொன்னில் உள்ள ஜீவ சமாதி மற்றும் கோயிலைப் பொறுத்தவரை அதன் நிர்வாக உரிமையை மட்டுமே வாரிசுதாரர்கள் மேற்கொள்ள முடியும் என்றும், கோயில் சொத்துக்கள் பொதுமக்களுக்கே உரியது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காந்திமீனாள் தரப்பினர் இதுவரை வழக்கின் விவரங்களை வெளியில் தெரிவிக்காமல் நிர்வாகம் செய்து வந்த சூழலில், நீதிமன்றத்தின் இந்த இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பசும்பொன் குருபூஜை மற்றும் அரசு விழாவில் தங்களது பெயர்களை நெறிமுறைப்படி (Protocol) அரசாணையில் சேர்த்து, விழாவைத் தங்கள் முன்னிலையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாரிசுதாரர்களான இந்திராணி, முத்துரத்தினம், நாகஜோதி, தெய்வராணி, மணிகண்டன், வாசுகி உள்ளிட்ட 8 பேர் அடங்கிய குடும்பத்தினர் அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், அடுத்தகட்ட அரசு ஆலோசனைக் கூட்டங்களில் இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர்.




