• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

தடுப்புச் சுவரில் கார் பயங்கர மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

BySeenu

Jul 9, 2026

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே அதிவேகமாக வந்த கார், ராமகிருஷ்ணா வித்யாலயா மேம்பாலத் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதிய விபத்தில், கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (37). இவர் கோவையில் உள்ள பிரபல தனியார் நிறுவனமான பிரிகால் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சசிகுமார் தனது ஃபோர்டு ஃபிகோ (Ford Figo – TN 09 BL 9048) காரில் கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். கார் ராமகிருஷ்ணா வித்யாலயா மேம்பாலம் ஏறும் தொடக்கப் பகுதிக்கு அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகத்தில் சாலையின் நடுவே இருந்த மேம்பாலத் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.

​இந்தக் கொடூர மோதலில் காரின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியதுடன், காரை ஓட்டி வந்த சசிகுமாரின் தலையில் மிகக் கடுமையான பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. விபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், உடனடியாக அவரை மீட்டுச் சிகிச்சைக்காகப் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர்.

​அங்குச் சசிகுமாரைப் பரிசோதித்த அவசரப் பிரிவு மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

​விபத்து குறித்துத் தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்கு உள்ளான காரை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர் செய்தனர். ​பின்னர், சசிகுமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்துப் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.