மதுரை அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. மற்றும் ராஜா உசேன் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவின் போது முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,நேற்று பாலாஜி மற்றும் அவரது நண்பரான ராஜா உசேன் ஆகிய இருவரும் மாநகராட்சி காலனி பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய கும்பல், பாலாஜி மற்றும் ராஜா உசேனிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பாலாஜியையும், ராஜா உசேனையும் சரமாரியாக வெட்டினர்.
அக்கும்பலின் கொடூரத் தாக்குதலில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயமடைந்த பாலாஜி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் ராஜா உசேன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் காவல்துறையினர், உடனே விரைந்து வந்து பாலாஜியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூரக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையின் இக்கொலை வழக்கில் தொடர்புடைய
மாதேஷ் (வயது 21)
சஞ்சய் (வயது 17)
சிவக்குமார் (வயது 17)
சூர்ய பிரகாஷ் (வயது 17)
தயாநிதி வயது( 17) ஆகிய 5 பேரை போலீசார் தற்போது அதிரடியாகப் பிடித்து
5 பேரிடமும் அவனியாபுரம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பூவலிங்கம் தப்பியோடி தலைமறைவாக உள்ளார்.
பூவலிங்கத்தை கைது செய்ய அவனியாபுரம் காவல்துறையினர் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர். கோவில் திருவிழா தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரை அவனியாபுரம் பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




