புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கருப்பையா. இவர் வீர முத்தரையர் சங்கம் என்ற ஓர் அமைப்பை தொடங்கி தொடர்ந்து நடத்தி வந்தார். கூடுதலாக தேசிய பாட்டாளி கட்சி என்ற ஓர் அரசியல் கட்சியையும் தொடங்கி அதன் நிறுவனராகவும் மாநில தலைவராகவும் இருந்து செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் முத்தரையர் இனத்தை சேர்ந்த அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வருபவர்கள் என பலரும் அதிமுக திமுக பாஜக என கூட்டணிகளில் அங்கம் வகித்து வரும் நிலையில் இவர் அண்மையில் சசிகலா அவர்கள் தொடங்கிய கட்சியில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்தி அந்த ஒப்பந்தத்தின்படி தொகுதி பங்கீடும் செய்து கொண்டார். அந்த வகையில் இன்னும் பல்வேறு அமைப்புகளும் அந்தக் கூட்டணியில் இருக்கும் நிலையில் கருப்பையா முத்தரையர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் சிங்கம் சின்னத்தில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறார். இன்று தனது கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக மேளதாளம் முழங்க புதுக்கோட்டை மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோட்டாட்சியர் அலுவலகம் வந்து சேர்ந்தார்.

அங்கு மாவட்டத் துணை ஆட்சியர் பிரகாஷ் அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான முத்தரையர்கள் இருப்பதால் அவர்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கிறார்.



