• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஆதிமூர்த்தி கோவில் பெரிய கும்பிடு திருவிழா..,

ByKalamegam Viswanathan

Apr 4, 2026

மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற பெரிய கும்பிடு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய வழக்கப்படி பெரிய கும்பிடு எனப்படும் பெருந்திருவிழா சுவாமி உத்தரவு பெற்ற பின்னரே கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு, விழா கொண்டாட இந்த ஆண்டு தான் உத்தரவு கிடைக்கப் பெற்றது. இதையடுத்து 5 நாட்கள் விழா கொண்டாடப்பட்டது.

மார்ச் 30ல், ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோயிலில் இருந்த சுவாமி பெட்டிகள் நிலையில் இருந்து இறக்கப்பட்டன. அங்கிருந்து அரசுத் தாய், நல்லுத்தாய் – காளித்தாய், அங்குத்தாய், தனலட்சுமி ஆகிய கோயில்களுக்கான பெட்டிகள், வான வேடிக்கையோடு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

பின்னர், பெட்டியில் உள்ள அணிகலன்கள், பூஜைப் பொருள்கள் சரிபார்க்கப் பட்டு, மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பத்தில் நீராட்டும் வைபவங்கள் நடைபெற்றன.

பின்னர் அரிய மாணிக்கம் அம்பாள் கோயில் முன்பாக பூக்குழி வளர்த்து, அதில் மருளாடிகள் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று (வெள்ளி கிழமை) ஆதிமூர்த்தி கோயிலில் அனைத்து சுவாமி பெட்டிகளுக்கும், பூஜை செய்து திருவிழா நிறைவு பெற்றது.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.