கோவையில் செயல்பட்டு வரும் அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 37-வது பட்டமளிப்பு விழா அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி முதன்மை விருந்தினராக பங்கேற்று தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற 94 மாணவியர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2328 மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய காமகோடி, பட்டம்பெறும் மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர் பிரதமரின் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 யை நோக்கி நாம் செயல்பட வேண்டும், ஒரு காலத்தில் போலியோ தடுப்பூசிக்கு நாம் காத்திருந்தோம் ஆனால் தற்பொழுது கொரோனா பெருந்தொற்றின் போது நாமே தடுப்பூசியை தயாரித்து பிற நாடுகளுக்கு அனுப்பியுள்ளோம் இதுதான் நம்முடைய வளர்ச்சி என்றார்.

நம்முடைய நாடு மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ளது எனவே தரமான கல்வியை நாம் தரவேண்டும் உயர்கல்வி சேர்ப்பவர்களின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளது தமிழ்நாட்டில் சுமார் 50% பேர் உயர்கல்வியில் சேருகிறார்கள் இதனை நாம் மேலும் உயர்த்த வேண்டும் என தெரிவித்தார். ஒவ்வொருவரும் கிராமங்களுக்கு சென்று பொருளாதாரத்தில் பின் தங்கிய இரண்டு குழந்தைகளையாவது படிக்க வைக்க வேண்டும் அவர்களுக்காக ஊக்கத்தை அளிக்க வேண்டும் அது போன்று செய்தால் 2035-ல் நம் நாடு கல்வியில் சிறந்து விளங்கும் என்று தெரிவித்தார்.தற்போது எரிவாயுவிற்கு நாம் வேறு ஒன்றை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு போர் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்று கூறிய அவர் நம்முடைய சக்தியை நாம் பயன்படுத்துவதற்கு இது ஒரு அனுபவமாக அமைந்துள்ளது என்றார். நம் நாட்டிலேயே அதிகமான வளங்கள் உள்ளது என்றும் நம் நாட்டு தயாரிப்புகளை நாம் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மருத்துவத்திலும் நாம் நாட்டு மருந்து கடைகளில் உள்ள மருந்துகளை பயன்படுத்தலாம் கோபால் பல்பொடி போன்றவற்றை நாம் பயன்படுத்தலாம் நம் ஊரிலேயே அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்ய முடிகிறது என்று தெரிவித்த அவர் அதே போன்று ஒழுக்கத்தையும் நாம் வளர்த்து கொள்ள வேண்டும் இதனை பின்பற்றினாலே 2047 ஆம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதமாக நாம் மாறுவோம் என்று தெரிவித்தார்.




