விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலகத்தில் அதை ஊரைச் சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் கூடலிங்கம் மற்றும் அவரது மகன் வெயிலுமுத்து ஆகிய இருவரும் கிராமப்புற சான்றிதழ் வழங்க கோரி தகராறில் ஈடுபட்டு கிராம உதவியாளரை தாக்கியதுடன் அவரது செல்ஃபோனை பறித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருத்தங்கல் போலீசார் திமுக பிரமுகரின் மகன் வெயிலுமுத்துவை கைது செய்து தலைமறைவாக உள்ள திமுக பிரமுகர் கூடலிங்கத்தை தேடிவருகின்றனர். இந்நிலையில் திமுக பிரமுகர் கூடலிங்கத்தை கைது செய்ய வலியுறுத்தியும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தியும் இன்று சிவகாசி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களும் பணியை புறக்கணித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று பணியை புறக்கணித்ததால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் நாளை மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் பணியை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.










