• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குவாரியும் சட்டமீறலும்..,

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிமவளக் கொள்ளை தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அடைமிதிப்பான் குளம் குவாரி விபத்துக்கு பின் அரசு வெளியிட்ட அறிக்கையில் 50 லட்சம் கன மீட்டர் அளவுக்கு சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ரூ 262 கோடி அபராதம் விதிக்கப்பட்டு குவாரிகள் மூடப்பட்டன. அதன்பின் அபராதம் ரூ 16 கோடியாக குறைக்கப்பட்டு குவாரிகள் மீண்டும் செயல்பட தொடங்கின. நெல்லை மாவட்டத்தில் 2022 ல் 53 குவாரிகள் சட்டவிரோதமாக சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுத்து உள்ளனர். 2024ல் இம்மாவட்டத்தில் மட்டும் 120 குவாரிகளுக்கு மேல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இச்சூழ்நிலையில் இக்கல் குவாரிகளால் மக்கள் அடையும் பாதிப்புகளை கண்டறிந்து ஆவணப்படுத்திடும் நோக்கத்தில் அறப்போர் இயக்கம் திருநெல்வேலியில் நவம்பர் 2ந்தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தினை நடத்தியது. இதில் பாதிப்பிற்கு உள்ளான பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கல்குவாரி வெடியின் அதிர்வால் தங்கள் வீடுகள் பாதிக்கப்படுவது, நிலத்தடி நீர், விவசாயம் பாதிப்புக்கு உள்ளாவது குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

அப்போது கல்குவாரி நடத்தும் நபர்களால் அனுப்பபட்ட குண்டர்கள் 25க்கும் மேற்பட்டோர் அந்நிகழ்ச்சியை சீர்குலைக்கும் நோக்கத்துடனும், ஏற்பாட்டாளர்களை தாக்கும் நோக்கிலும் போலீசார் முன்னிலையில் கலவரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் மக்கள் சிவில் உரிமை கழக தேசிய பொது செயலாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சுரேஷ் தாக்குதலுக்கு உள்ளானார்.இதன்
மூலம் காவல்துறை சட்டத்தின் பக்கமும், பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் பக்கமும் நிற்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

கல்குவாரிகளால் விளைநிலங்கள், வீடுகள், பல்லுயிர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகும் சூழலில் எந்த சட்டவரையறைகளையும் கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுவோர் மதிப்பதில்லை. இக்கொள்ளையினை தடுக்கும் வகையில் இவர்கள் மீது அரசும் கடும் நடவடிக்கை எடுப்பதில்லை. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பின்புலத்தில் செயல்படும் இத்தகைய மலை விழுங்கி மகாதேவன்களை கண்டு மக்கள் அஞ்சும் நிலையே உள்ளது.

தங்களது சட்ட விரோத செயலுக்கு எதிராக செயல்படுபவர்களை கொலை செய்யவும் அஞ்சாத இக் கும்பல் எதிர் குரலை கருத்துக்களால் எதிர்கொள்ள திராணியற்று குரல்வளையை நெறிக்க முற்படுவதற்கு உதாரணமே திருநெல்வேலி சம்பவம். இந்நிகழ்விற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். மேலும் இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஜனநாயகத்தின் கருத்து உரிமை காக்கப்படவும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும், நீதி நிலைநாட்டவும், சுற்றுச்சூழல் மீட்கப்படவும் அரசு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்
என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.