• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட மக்கள்..,

ByKalamegam Viswanathan

Oct 25, 2025

மதுரை மாநகராட்சி 71வது வார்டில் நீண்டநாட்களாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளையும், அமைச்சர் மூர்த்தியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதியில் கடந்த சில வாரங்களாக மழைநீர் வடிகால்களில் செல்லாததால் சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். கொசுக்கள் பெருகி தொற்றுநோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். பள்ளிக்கு செல்லும் சிறுவர், வேலைக்கு செல்லும் பெண்கள், முதியவர்கள் தினந்தோறும் இந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த பிரச்சனை குறித்து பலமுறை மாநகராட்சி பொறுப்புடைய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து 71வது வார்டுக்கு ஆய்வுப்பணிக்காக வந்த அமைச்சர் மூர்த்தியை பொதுமக்கள் திடீர் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

உடனடி வடிகால் சீரமைப்பு, கழிவுநீர் அகற்றம், தூய்மை பணிகளை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து அப்பகுதி நிலைமையை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி, இத்தகைய பிரச்சனைக்கு ஏன் இதுவரை தீர்வு காணப்படவில்லை என்று அதிகாரிகளிடம் உரிய விளக்கம் கேட்டார்.

பின்னர் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து மழைநீர் மற்றும் கழிவுநீர் தேக்கத்தை அகற்ற தேவையான உத்தரவுகளை அமைச்சர் பிறப்பித்தார்.