காரமடையை அடுத்துள்ள காளம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 1வது வார்டு விஜயநகரம் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அப்போதைய மக்கள் தொகை படி கட்டப்பட்டது.மேலும்,நீர்த்தேக்க தொட்டி கட்டி 35 ஆண்டு காலம் ஆகிவிட்டதால் சிதிலுமடைந்து எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருந்து வந்தனர்.

இதனால் இந்த நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு அப்பகுதியில் புதிதாக 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நீலகிரி எம்பி ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அதே பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
இதனிடையே பழைய நீர்த்தேக்க தொட்டியை நேற்று இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.அதிகாரிகள் முன்னிலையில் கீழ்தளத்தில் இருந்த பில்லர்களில் சுத்தியலை கொண்டு அடிக்க அடிக்கவே நொடிப்பொழுதில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி சரிந்து விழுந்தது.
முன்னெச்சரிக்கையாக அப்பகுதிக்கு மக்கள் எவரும் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.தற்போது இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.