• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு: எடப்பாடி அதிரடி!

ByRAGAV

Sep 6, 2025 , , ,

அதிமுகவின் அமைப்பு செயலாளராகவும் ஈரோடு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அந்த பொறுப்புகளில் இருந்து இன்று செப்டம்பர் 6 நீக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று செப்டம்பர் 5ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமானால் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இதை பத்து நாட்களுக்குள் தொடங்க வேண்டும். இல்லையென்றால் அதற்கான முன்னெடுப்புகளை ஒத்த கருத்து உள்ளவர்களோடு சேர்ந்து நான் தொடங்குவேன். அதுவரை எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று அறிவித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாட்கள் கெடு விதித்தார்.

இதற்கு நேற்றைய பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த பதிலும் சொல்லவில்லை.

நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று காலை கே. பி. முனுசாமி, எஸ். பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார்.

இந்த திண்டுக்கல் ஆலோசனைக்கு பிறகு அந்த அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது அதிமுகவின் அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய கட்சி பதவிகளில் இருந்து செங்கோட்டையனை அதிரடியாக நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

நீக்கப்பட்டவர்களை சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் இதுதான் நிலைமை என்ற மறைமுக எச்சரிக்கையும் இதில் அடங்கி இருக்கிறது என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.