• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சுதந்திர தினம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்!

நமது  பாரதத் திருநாட்டின் 79 ஆவது சுதந்திரத் திருநாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் மூவரணக் கொடியேற்றி உரையாற்றினார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதல் அறிவிப்பு 

மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும்  மாதாந்திர ஓய்வூதியம் 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு –

மாநில அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு –

வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித் தோன்றல்கள், சிவகங்கை மருது சகோதரர்கள் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல் பெற்றுவரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

நான்காவது அறிவிப்பு –

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு –

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

ஆறாவது அறிவிப்பு –

தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை, மாதவரத்தில் 33 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உள்கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஏழாவது அறிவிப்பு –

தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

எட்டாவது அறிவிப்பு –

ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும்.

ஒன்பதாவது அறிவிப்பு –

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற, நவீன தொழில்நுட்பங்களில் பத்தாயிரம் மாணவர்களுக்கு 

15 கோடி ரூபாய் செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

இந்த ஒன்பது அறிவிப்புகளும் விரைவில் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சுதந்திர  தினத்தில் பேசினார்.