புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாவட்ட முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள திருவேங்கைவாசல் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரகதாம்பாள் உடனுறை வியாக்கபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பழமை வாய்ந்த மரம் மழையினால் சாய்ந்து கோவில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது மேலும் கோவிலுக்கு வரக்கூடிய மின்சாரம் வயரும் துண்டிக்கப்பட்டது.

இதனால் கோவில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து கோவிலில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதேபோன்று மின்சாரத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான்கு நாட்கள் ஆகியும் இந்து சமய அறநிலைத்துறையும் மின்சார துறையும் கண்டுகொள்ளாததால் நான்கு நாட்களாகவே கோவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் உள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலில் இக்கோயிலும் ஒன்றாகும் இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் நிலையில் தற்பொழுது 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கிக் கிடக்கின்றது புகார் தெரிவித்தும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர் எனவே உடனடியாக கோவிலில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி உடனடியாக மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிபொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.