விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முக்குராந்தல் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் இதன் சிறப்பு அம்சமாக இரவு தீ மிதி திருவிழா சிறப்பாக பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டு வைபவத்துடன் தொடங்கியது. பக்தர்கள் காப்புக் கட்டி அக்னி செட்டி பூக்குழி இறங்குதல் பால்குடம் எடுத்தல் காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்த விரதத்தை தொடங்கினர்.
அதனை அடுத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படி உபயதாரர்கள் விழாவாக தினமும் அம்மனுக்கு பால் பன்னீர் ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருள்களால் அபிஷேகத்துக்கு பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தினமும் இரவில் மாரியம்மன் பல்லக்கில் அமர்ந்து சாத்தூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் வீதி உலா வருவார். பங்குனி பொங்கல் எட்டாம் நாளான இன்று பக்தர்கள் அம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுத்தல் காவடி எடுத்தல் அக்னி சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

மாலையில் சாத்தூர் அதனைச் சுற்றியுள்ள வெங்கடாசலபுரம் படந்தால் அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் முக்குராந்தல் பகுதியில் உள்ள அம்மன் திடலில் பொங்கல் வைத்து வழிபடுவர்.பங்குனி பொங்கலின் சிறப்பு நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடுநிசி வேளையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி தீ மிதித்து அம்மனை வணங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளாக பூக்குழியில் விறகுகள் அடிக்கி பூக்குழியை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.பக்தர்கள் காணிக்கையாக மர விறகுகளை வாங்கி செலுத்தி வருகின்றனர்.