நற்றிணைப்பாடல்: 384
பைம் புறப் புறவின் செங் காற் சேவல்
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம் அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ:
காண் இனி வாழி – என் நெஞ்சே! – நாண் விட்டு
அருந் துயர் உழந்த காலை மருந்து எனப்படூஉம் மடவோளையே.
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ திணை:
பொருள்:
எமது உள்ளமே நீ வாழ்வாயாக! நாணமென்பது குறுக்கே தடுப்பின் அப்பொழுது காம நோயைத் தீர்க்கும் நெறியின்றி அரிய துன்பம் எய்தி யாம் வருந்தியவழி அத் துன்பநோய்க்கு மருந்தெனப்படாது நாணம் விட்டு நெருங்கிய காலத்து அக் காம நோய்க்கு மருந்தெனப்படுகின்ற; மடப்பத்தையுடைய இவளை; வளவிய புறத்தையும் சிவந்த காலையுடைய புறவின் சேவல் களரியில் உயர்ந்து வளர்ந்து கவையாகிய முள்ளையுடைய கள்ளியின் தலையிலே சுள்ளிகளையடுக்கி அமைத்த குடம்பையின்கண்ணே; பிள்ளைகளை யீன்று அவற்றைக் காவல் செய்யுமாறு பொருந்திய வருந்திய நடையுடைய பேடையாகிய புறவு; உண்ணும் பொருட்டு; வேற்றரசர் படையொடு வந்து பொருது பகைமுனையிலே சென்று எல்லாவற்றையும் கவர்ந்து சென்றொழிந்ததனாலே மாந்தர் யாருமின்றி முதிர்ந்த பாழ் நிலத்திலே தானே விளைந்து உதிர்ந்த நெற்கதிர்களைப் பெற்றுக் கொணர்ந்து கொடுக்காநின்ற மாண்பு சிறிதும் இல்லாத நெடுங்தூரத்திற்கு அப்பாலுள்ள நாட்டுக்குச் செல்லும் நெறியின்கண்; நல்ல நாட்காலையின் மலர்ந்த வேங்கை மரத்தின் பொன்போன்ற புதிய பூக்கள்; உதிர்ந்து பரவிக்கிடப்ப அப்பரப்பின்மீது அன்னப்பறவை நடப்பது போல நடக்க அதனை நாம் நேரே கண்டு மகிழ்ந்தோம்; அவ்வாறே இனி நீயுங் காண்பாயாக!