• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 1,290 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Byவிஷா

May 10, 2024

தமிழகத்தில் வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, 1,290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
மே 11, 12 வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை,திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் (மே 10, 11) 930 பேருந்துகள் மற்றும் சென்னை, கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 250 சிறப்பு பேருந்துகளும் என மொத்தமாக 1,290 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்துகளில் www.tnstc.in என்ற இணையதளம்மற்றும் tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் பயணிக்க சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.