• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திராவிட மாடலை பின்பற்றினாலே உலகமே இந்தியாவை பேசும் – கமல்ஹாசன் பேச்சு

Byகதிரவன்

Apr 3, 2024

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் ம தி மு க சார்பில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர்…

தேசம், தேசபக்தி, அரசு என்பது என்னென்ன என்பதை நாம் அனைவரும் வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டும். தேசம் என்பது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது ஆனால் அரசு என்பது விமர்சனத்திற்கு உட்பட்டது தான். அரசை விமர்சித்தால் தேச துரோகம் என்கிறார்கள் அது தவறு.

தேசத்தின் பன்முகத்தன்மையை காக்க வேண்டிய சூழல் உள்ளது திருச்சி தேசத்தின் பன்முகத்தன்மையை காட்ட ஊர்.

மதக் கலவரங்கள் இந்தியாவில் எங்கு நடந்தாலும் அதே தமிழ்நாட்டில் மிக குறைவு அதில் திருச்சியில் அப்படி ஒரு நிலையே இல்லை என கூறினால் அது மிகையாகாது

அரசியலமைப்பு சட்டம் என்கிற புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் எந்த புத்தகமானாலும் பாதுகாக்கப்படும். இனி இந்த புத்தகங்கள் எல்லாம் எழுதக்கூடாது, படிக்க கூடாது என்கிற பன்முகத்தன்மை விரிந்த நோக்கு இல்லாத எந்த அரசும் ஆபத்தானது.
அதுபோன்ற அரசுதான் அரசியலமைப்பு சட்டத்தில் கை வைக்கும் குடியுரிமை சட்டத்தில் கை வைக்கும் அந்த அரசை விமர்சிக்க வேண்டியது என் கடமை அந்த அரசியலை விமர்சிக்க வேண்டியது உங்களுடைய கடமை.

நான் சீட்டுக்காக வரவில்லை நாட்டுக்காக வந்துள்ளேன். எனக்கு ஒரு சீட்டு நீங்கள் சின்ன பிள்ளையிலிருந்து இடம் கொடுத்துள்ளீர்கள் உங்கள் மனதில் நான் எப்பொழுது வேண்டுமானாலும் நான் அமரலாம்.

தமிழக மக்கள் மீதும் இந்தியாவின் மீதும் எனக்குள்ள காதல் சாதாரண காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது. என்னுடைய நலன் உங்களுடைய நலன் தான் அதற்காகத்தான் அரசியலுக்கு நான் வந்துள்ளேன்.

இங்குள்ள வேட்பாளரை தனி மனிதராக பார்க்காதீர்கள் வைகோவாகவோ, துரை வைகோவாகவோ பார்க்காதீர்கள் நம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காக்க பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்புபவராக பாருங்கள்.

திராவிட மாடலை சிறிது பின்பற்றினாலே இந்திய மாடலை பற்றி உலகமே பேசும்.
திராவிட மாடல் என்பது இன்று நேற்று வந்ததல்ல 1920 ஆம் ஆண்டு மதிய உணவுத் திட்டத்தை நீதி கட்சி தொடங்கியது. அதை தொடர்ந்து நடத்த முடியாமல் போனதற்கு காரணம் அரசு பலம் நம் கையில் இல்லாமல் போனதுதான். அதை கவனித்துக் கொண்டிருந்த காமராஜர் தனக்கு அரசு பலம் வந்த பொழுது அதை செயல்படுத்தினார். அதன் பின் எம்ஜிஆர் தொடர்ந்தார் இரு வேறு கட்சிகள் வந்த பொழுதும் அது தொடர்ந்தது. இன்று முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார் திராவிட மாடல் என்பது 1920 லிருந்து தொடங்கிவிட்டது.

திராவிட மாடலின் படி இந்தியா நடந்தால் இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழ்நாடு தான் இருக்கும் அப்படி மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இங்கு சிலையாக அமர்ந்திருக்கும் தந்தை பெரியார் யாருக்கு எதிராக பேசினார் என்பதை விட்டு விடுங்கள் ஆனால் இன்று நீங்கள் அனைவரும் சமமாக ஒன்றாக நிற்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் அவர் தான் அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் வணங்கவில்லை என்றாலும் அப்படிப்பட்ட ஆட்களை மறந்து விடக்கூடாது.

திருச்சியில் திமுக அரசு அமைந்த பின்பு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாம் ஒரு ரூபாய் வரி கொடுத்தால் மத்திய அரசு 29 பைசா தான் திருப்பித் தருகிறார்கள் அதை வைத்துக்கொண்டு தான் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உத்திரபிரதேசம், பீகாரருக்கு அதிக நிதி ஒதுக்கினார்கள் அது ஒதுக்கி அவர்கள் முன்னேறி இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அங்கும் எந்த முன்னேற்றமும் இல்லை அவர்களெல்லாம் வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகமே இந்தியாவே திரும்பிப் பார்க்கும். எனக்கு எந்த மத சாயலும் இல்லாமல் வளர என் தந்தை உட்பட பலர் கற்றுக் கொடுத்தார்கள் அவர்கள் நான் நன்றி சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. மொத்தத்தையும் கட்டுப்படுத்தி இந்திய துணை கண்டத்தையே தன் கையில் வைத்துள்ளார்கள் என்பதற்காக எல்லோருக்கும் சல்யூட் அடிக்க முடியாது.

1757 ல் கட்டபொம்மனுக்கு முன்பாக ஆங்கிலேயர்களிடம் நான் தாங்கள் ஏன் உங்களுக்கு வரி கட்ட வேண்டும் எனக் கேட்டவர் மருதநாயகம். அவர் இருக்கவே கூடாது என்பதற்காக அவர் உடலை நான்காக வெட்டி அவருடைய தலையை புதைத்த இடம் திருச்சி எதிர்த்து குரல் கொடுப்பவனை இல்லாமல் இல்லாமல் செய்பவது என்பது ஒரு விதமான அரசியல் எதிர்த்து குரல் கொடுத்தாலும் என்ன சொல்கிறான் எனக் கேட்பதுதான் நம்முடைய அரசியல் இந்தியாவின் அரசியல். அண்ணன் தம்பிகளை மோத விட்டு பார்ப்பது என்பது ஒரு அரசியல் தந்திரம். அது இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பண்பாட்டு பிரச்சனை மொழி பிரச்சனை இவற்றை கிளப்பி அரசு செய்யும் தவறுகளை போர்த்தும் போர்வையாக இவை பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை எனக்காக வேலை செய்யக்கூடியவர்கள் என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இதனை வேட்டை நாய் போல் வேறு யாரோ பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜி.எஸ்.டியால் கண்ணியமாக முதலாளியாக இருந்தவர்கள் இன்று என்ன செய்யப் போகிறோம் என கதறும் நிலைக்கு ஆக்கிவிட்டார்கள். இதையெல்லாம் செய்து குழப்பி விட்டால் தமிழ்நாட்டை பிடித்து விடலாம் என நினைக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு பிடிக்க முடியவில்லை அது வழிக்கு கொண்டே போகிறது. அப்பொழுது ஆளுநரை அனுப்பி வைப்பார்கள். அப்பொழுதும் அவர்கள் நினைப்பது நடக்கவில்லை என்றால் அந்த மாநிலத்தின் முதல்வர்களை சிறையில் அடைப்பார்கள்.

முதல்வரை தேர்ந்தெடுப்பதே மக்கள் தான். அவர்கள் முதல்வராக இருக்கலாம் ஆனால் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர்கள். எல்லோரையும் பயம்புடுத்தி விடலாம் என நினைக்கிறார்கள் 100 கோடி பேரை பயப்பிட வைக்க முடியாது. அதுவும் நடக்கவில்லை என்றால் பெட்டியையே தூக்கிக்கொண்டு சென்று விடுவார்கள் அதையே சிசிடிவி மூலம் பார்த்துள்ளோம். ஆட்சியில் அமரும்போது கேஸ் சிலிண்டர் வாங்கினால் வங்கி கணக்கில் பணம் வரும் என்றார்கள். ஆனால் வரவில்லை

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைந்த பொழுது அதை லாபத்திற்கு விற்ற அரசு இங்கே அமர்ந்திருக்கிறது. அதை நினைவுப்படுத்த வேண்டியது நம் கடமை அதை ஞாபகப்படுத்தவே வந்துள்ளேன். பட்டேலுக்கு சிலை, பாராளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவை கட்டி உள்ளார்கள் ஆனால் ஏழை மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் எய்ம்ஸ் கட்டிடம் என்கிறார்கள் அது எங்கே உள்ளது. அவர்கள் வாயால் சுடும் வடை மக்களின் பசியை ஆற்றாது

அரசியலில் மதம் கலந்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. மதம் வளரட்டும் உயரட்டும் அரசியலையும் மதத்தையும் கலக்கக்கூடாது. அரசும் மதமும் மக்களின் சொத்து அதை தனித்தனியாக பிரித்து பார்த்துக் கொள்ள வேண்டியது மக்களின் கடமை. எனக்காக வாக்கு கேட்கவில்லை சில விஷயங்களை நமக்காக நினைவுபடுத்தவே வந்துள்ளேன்.

தேசிய நீரோட்டத்தில் தமிழ்நாட்டுக்காரர்கள் கலக்க மறுக்கிறார்கள் என சிலர் கூறுகிறார்கள். கட்டபொம்மன் என்கிற பெயரிலோ வ உ சி என்கிற பெயரோ வடநாட்டில் இருக்காது. ஆனால் தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயரை கூறினால் பலர் கண்டிப்பாக இருப்பார்கள். நம்மைப் பார்த்து தேச நீரோட்டத்தில் கலக்க மறுக்கிறார்கள் என்கிறார்கள். நீங்கள் தான் தேச நிரோட்டத்தில் கலக்கவில்லை என்றார்.