கட்டி முடித்து 18 ஆண்டுகள் ஆகியும், தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமலும், பாசனத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதுதான் பச்சிலை நாச்சியம்மன் அணைக்கட்டு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பு.கல்லுப்பட்டி பகுதி விவசாயிகள் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை தேக்கி வைக்க அணைக்கட்டு கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் 2001 – 2002 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் 160 ஏக்கர் நேரடி பாசனத்திற்கும் 2000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக 20 அடி உயரத்தில் பச்சிலை நாச்சி அம்மன் அணைக்கட்டு திட்டம் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
தற்பொழுது தொடர்ந்து பெய்த வட கிழக்கு பருவமழையால் பச்சிலை நாச்சி அம்மன் அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நீர் வழிந்தோடி வருகிறது. இந்த அணைக்கட்டு கட்டப்பட்ட பொழுது கரைப்பகுதி முழுவதும் உறுதித் தன்மையுடன் கட்டப்படாததால் அணையில் தேங்கும் நீரானது, பலம் இல்லாத கறைகளில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவு மற்றும் சேதம் அடைந்த கரைகள் மூலம் 1 மாதத்தில் நீர் அணைத்தும் வீனாக வழிந்தோடி ஆற்றில் செல்வதால் இரண்டே மாதத்தில் அணையில் நீர் முற்றிலும் வற்றி விடுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் 160 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்காக கட்டப்பட்ட இந்த அணைக்கட்டு கட்டி முடிக்கப்பட்டு 18 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அணைக்கட்டில் தேங்கும் இரண்டு மாதத்தில் முழுமையாக நீர் வற்றி விடுவதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பச்சிலை நாச்சியம்மன் அணைக்கட்டு குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்..,
அணைக்கட்டு கட்டும் பொழுது கரைகள் பலம் இல்லாமல் கட்டப்பட்டதால் நீர்க்கசிவு ஏற்பட்டு நீர் தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளதால் எந்த பயனும் இல்லாத நிலையில் அணையின் உட்பகுதி கரையை 15 அடி உயரத்திற்கு கான்கிரீட் கட்டிடம் கொண்டு சுவர் எழுப்பினால் மட்டுமே இந்த அணைக்கட்டில் நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்த முடியும். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அணையின் கரை பகுதிகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.