• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

பேரூராட்சி பெண் தலைவர் தனது 30 நாள் கைக்குழந்தையுடன் ஆட்சியரிடம் மனு..,

ByG.Suresh

Nov 8, 2023

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களது பேரூராட்சிக்கு எந்த ஒரு நலத்திட்டமும் வரவில்லை என்றும் போதுமான நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதாக கூறி பேரூராட்சி பெண் தலைவர் தனது 30 நாள் கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரை அடுத்துள்ளது சிங்கம்புணரி பேரூராட்சி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் 7 இடங்களை அதிமுகவும் 3 இடங்களை திமுகவும் கைப்பற்றி திவ்யா பிரபு என்கிற பெண் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பேரூராட்சி தலைவர் திவ்யா பிரபு அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் இந்த பேரூராட்சிக்கு மட்டும் அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் மேலும் மற்ற பேரூராட்சிகளுக்கு ஒதுக்குவதைபோல் போதுமான அளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் இதனால் தாங்கள் வெற்றிபெற்ற பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் வராததால் மக்களை சந்திக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் இதே பேரூராட்சிக்குட்பட்டு கடந்த திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சமத்துவபுரத்தினை பேரூராட்சி நிதியை கொண்டு மராமத்து பணிகளை மேற்கொள்ளுமாறும் அந்த நிதி 1.5 கோடியை மாவட்ட நிர்வாகம் பின்னர் வழங்குவதாகவும் கடிதம் கொடுத்ததன் காரணமாக மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த சமத்துவபுரமும் முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஓராண்டிற்கு மேலாகியும் அந்த நிதியை இதுவரை ஒதுக்காமலும் மாவட்ட நிர்வாகம் காலம் கடத்தி வருவதாக கூறி பேரூராட்சி தலைவர் திவ்யா பிரபு தனது 30 நாள் கைக்குழந்தையுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியர் ஆஷா அஜித்தை சந்தித்து மனு அளித்ததுடன் திட்ட இயக்குநரையும் சந்தித்து முறையிட்டனர். உடன் பேரூராட்சி கவுன்சிலர்களும் வந்து முறையிட்டனர். நலத்திட்டங்கள் எதுவும் ஒதுக்கப்படாததை கண்டித்து பேரூராட்சி பெண் தலைவர் 30 நாள் கைக்குழந்தையுடன் வந்து ஆட்சியரை சந்தித்து மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.