• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Jul 7, 2023

நற்றிணைப் பாடல் 200

கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,
‘சாறு’ என நுவலும் முது வாய்க் குயவ!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ-

ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,
‘கை கவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று,
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன்

பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்’ எனவே.

பாடியவர்: கூடலூர்ப் பல் கண்ணனார்
திணை: மருதம்

பொருள்:

அரும்பு கட்டிய கதிர் போன்ற ஒள்ளிய பூங்கொத்தினையுடைய நொச்சி மாலையைச் சூடி; யாறு கிடந்தாற் போன்ற அகன்ற நெடிய தெருவின்கண்ணே யாவரும் அறிய இற்றை நாளால் இவ்வூரிலே திருவிழா நடவா நின்றது, எல்லீரும் போந்து காணுங்கோள் என்று கூறிச் செல்லுகின்ற; அறிவு வாய்ந்த குயவனே!; ஆம்பல் நெருங்கிய இனிய பெரிய வயலும் பொய்கையுமுடைய ஊரின்கண்ணே நீ செல்வாயாகி; ஆங்குள்ள மகளிரை யழைத்துக் கூரிய எயிற்றினையும் மெல்லிதாயகன்ற அல்குலையுமுடைய மங்கைமீர்!; கை விரும்புதற்குக் காரணமான நரம்பினையுடைய யாழிலே பாடும் இசைப்பாட்டு நுவலவல்ல பாணன் செய்த துன்பங்கள் மிகப் பலவாகி வளர்வன வாயின ஆதலின்; இப் பாணன் உள்ளால் பொய்யை நிரப்பிவைத்து மேலால் மெயம்மையைக் கொண்டு மூடி நுவலுகின்ற கொடிய சொல்லிலே கண்ணருள் செய்யாது நும்மைப் பாதுகாத்துக் கொள்ளுங்கோள்!; என்று முதலில் நீ திருவிழா நடப்பதை நுவன்று கொண்டு போவதுடன் இதனையும் கூட்டி அவ்விடத்துள்ளார்க்குக் கூறிப் போவாயாக!