நற்றிணைப் பாடல் 88:
யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?
வருந்தல்; வாழி! தோழி! யாம் சென்று
உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது,
கண்ணீர் அருவியாக
அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே.
பாடியவர்: நல்லந்துவனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
தலைவியிடம் தோழி சொல்கிறாள்.
நாம் முன்பு செய்த வினைக்கு இப்போது ஏன் மயங்குகிறாய்? வருந்தாதே. தோழி! வாழ்க! நாம் சென்று அவனிடம் சொல்லிவிட்டு வரலாம். எழுந்திரு. கடலலையில் விளைந்த உப்பு மழையில் கரைவது போல நீ நெஞ்சம் உருகுவது கண்டு நான் அஞ்சுகிறேன். அங்கே பார். அருவி கொட்டுகிறது. நம் கண்ணீர் கொட்டுவது போலக் கொட்டுகிறது. அவர் மலையில் அவருக்கு காட்டுவது போலக் கொட்டுகிறது. அவர் கொடுமையைத் தூற்றுவது போலக் கொட்டுகிறது. நம்மிடம் அன்பு கொண்டிருப்பதால் கொட்டி அவருக்குக் காட்டுகிறது. அது மிகப் பழைய அருவி ஆயிற்றே.