நற்றிணைப் பாடல் 72:
”பேணுப பேணார் பெரியோர்” என்பது
நாணு தக்கன்று அது காணுங்காலை;
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது
அழிதக்கன்றால் தானே; கொண்கன்,
”யான் யாய் அஞ்சுவல்” எனினும், தான் எற்
பிரிதல் சூழான்மன்னே; இனியே
கானல் ஆயம் அறியினும், ”ஆனாது,
அலர் வந்தன்றுகொல்?” என்னும்; அதனால்,
”புலர்வதுகொல், அவன் நட்பு!” எனா
அஞ்சுவல் தோழி! என் நெஞ்சத்தானே!
பாடியவர்: இளம்போதியார்
திணை: நெய்தல்
பொருள்:
தலைவன் தலைவிக்காகக் காத்திருக்கிறான். தொடர்புக்கு வழியில்லை என்று தலைவனுக்கு உணர்த்தும் வகையில் தோழி தலைவியிடம் சில சொல்கிறாள்.
தொடு
பெரியோர் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவர் என்பது நம் தலைவன் நடந்துகொள்வதைப் பார்த்தால் நாணவேண்டிய ஒன்றாக உள்ளது. உனக்கும் எனக்கும் உயிர் ஒன்று போன்ற நட்பு. அப்படி இருக்கும்போது உனக்கு நான் மறைப்பது எதற்காக? அவன் நடந்துகொள்வது பெரிதும் வருந்தத் தக்க செயல். நானோ தாய்க்குத் தெரிந்துவிடுமே என்று அஞ்சிக்கொண்டிருக்கிறேன். அவனோ என்னை விட்டுப் பிரியாமல் உன்னைத் தனக்குத் தரும்படி வேண்டிக்கொண்டிருக்கிறான். நம் கானல் விளையாட்டு நம் ஆயத் தோழிமாருக்குத் தெரிந்திருப்பது போலப் பேசுகிறான். இனி, அவன் நட்பில் உள்ள ஈரம் காய்ந்து உலர வேண்டியதுதான். இதனை எண்ணி என் நெஞ்சு படபடக்கிறது