புதன்கிழமை காலை 10:30 மணி அளவில் கிடைக்கப்பெற்ற தகவலின் படி திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் கணேசன் என்பவரின் தோட்டத்து கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயைத் துணியால் கட்டி படுகொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் மிதந்தார்
தகவலறிந்த தாடிக்கொம்பு போலீசார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட S.P.பிரதீப், உத்தரவின் பேரில் புறநகர் DSP. சிபிசாய் சௌந்தர்ய்ன் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, முனியாண்டி மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நபர் வேடசந்தூர், பூத்தாம்பட்டியை சேர்ந்த ஜோதிமணி(37) என்றும் இவருக்கும் வேடசந்தூரை சேர்ந்த முருகன் மனைவி கோமதி (33) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோமதிக்கு ஸ்டாலின் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதற்கு ஜோதிமணி இடையூறாக இருந்ததால் கோமதி அவரது தந்தை, நடராஜன் 60 தாய் நீலா (55), ஸ்டாலின்(27),ஆரோக்கியசாமி(37), குட்டி(24) ஆகியோர் வேடசந்தூரில் வீட்டிற்கு ஜோதிமணியை வரவழைத்து உளுந்தங்கஞ்சியில் 4 தூக்க மாத்திரை மற்றும் வரக்காபியில் 4 தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்து கை, கால்கள், வாயை கட்டி உடலை சென்னமநாயக்கன்பட்டி அருகே கிணற்றில் வீசி சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தாடிக்கொம்பு போலீசார் 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.