• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மின்மாற்றியில் பற்றிய தீ விபத்தில் 4 மாணவிகள் மயக்கம்..!

ByKalamegam Viswanathan

Nov 4, 2023
 மதுரை காமராஜர் பல்கலைகழக விடுதியருகே, மின்மாற்றியில் பற்றிய தீவிபத்தில் 4 மாணவிகள் மயக்கம் ஏற்பட்டதில் அதிர்ச்சியடைந்த மற்ற மாணவிகள் விடுதியை விட்டு ஓடியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. 
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், மதுரையில்  மாலை முதல் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் இரவிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பெய்த மழையின் போது பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் மாற்றியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் தீயானது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால், விடுதி மாணவிகள் அதிர்ச்சிக்குள்ளாகி அங்கிருந்த பல்கலைகழக நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சில விடுதி மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே தீயணைப்புத் துறையினருக்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மதுரை பெரியார் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மழை என்பதால் தீ தானாகவே அணைந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி வளாகம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதில் நான்கு மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மழையினால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவி விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவி விடுதி வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் விடுதியை விட்டு நள்ளிரவில் ஒட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.