கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கும் வகையில், சென்னையில் 3 லட்சம் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள பீமனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், குடிநீர் வசதிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது..,
கோடை வெப்பத்தை எதிர்கொள்ள மாநகராட்சியின் சார்பில் 188 இடங்களில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 16நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகள் ஆகியவற்றில் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்படுகிறது.
வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மாநகராட்சியின் அனைத்துசுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், 3 லட்சம் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்களும் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.