• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சென்னையில் 1 மணி நேரத்தில் 8 இடங்களில் வழிப்பறி- சினிமா பாணியில் கைது செய்த போலீஸ்!

ByP.Kavitha Kumar

Mar 25, 2025

சென்னையில் இன்று அதிகாலை ஒரு மணி நேரத்தில் 8 இடங்களில் வழிப்பறி செய்து விட்டு விமானம் மூலம் தப்ப முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

அதே பகுதியில் உள்ள சாஸ்திரி நகரிலும் செயின் பறிப்பு நடந்துள்ளது. கிண்டி மைதானத்தில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகை, சைதாப்பேட்டையில் பெண்ணிடம் ஒரு சவரன், வேளச்சேரி, பள்ளிக்கரணையிலும் தலா ஒரு பெண்ணிடமும் நகை பறிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து 8 இடங்களில் நடைபெற்ற செயின்பறிப்பு சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். அத்துடன் பள்ளிக்கரணையில் இருந்து அடையாறு, வேளச்சேரி பகுதிகளில் சில மணி நேரத்தில் இந்த குற்றச் செயல்கள் அனைத்தும் அரங்கேறி இருப்பது அப்பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சியில் தெரியவந்தது.

இதனிடையே செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் விமான நிலையத்திற்கு செல்வது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்துடன் செயின்பறிப்பில் ஈடுபட்ட இருவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், விமானம் மூலம் ஐதாராபாத் தப்பிச்செல்ல முயன்றதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.