தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்வது தொடர்கதையாகியுள்ளது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்துவதுடன் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்கள் சென்ற இரணடு விசைப்படகுகளையும் அவர்கள்பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.