தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது புதிய ஒப்பந்தம் 1.9.2023 தேதி முதல் அமலுக்கு வர வேண்டும். தொழிற்சங்கங்களின் போராட்டத்தை அடுத்து 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ந் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தையையும், கடந்த பிப்ரவரி 13-14ந் தேதிகளில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையையும் நடத்தியது.
அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் மே 27 அன்று 12 மணி நேர உண்ணாவிரதம் போராட்டத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஸ் ஆகிய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதனையடுத்து மே 29அன்று ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.
இதன்படி போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து துறைச் செயலாளர் பனீந்தர்ரெட்டி, போக்குவரத்து துறை அரசு கூடுதல் செயலாளர் கார்மேகம் நிதித்துறை அரசு சிறப்பு செயலாளர் அருண் சுந்தர் மாநகர போக்குவரத்து கழக் மேலாண்மை இயக்குநர் பிரபுசங்கர், தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட 8 போக்குவரத்து கழக மேலான் இயக்குநர்கள், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 86 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஏழு மணி நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு ஊதி ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டது,இந்த பேச்சுவார்த்தையில் ஆறு சதவீத ஊதிய உயர்வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த பேச்சுவார்த்தையில் இருந்து வெளியெறியபின் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
15வது ஊதிய ஒப்பந்தம், 1.9.2023 முதல் ஊதிய ஒப்பந்தம் அமலாகும். அடிப்படை சம்பளத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால் 1.9.2024 முதல் நிலுவைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்து சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளிட்ட சங்கங்கள் கையழுத்திடாமல் வெளிநடப்பு செய்துள்ளோம்.
ஒருவருட நிலுவைத் தொகை இழப்பால் தொழிலாளர்களுக்கு சுமார் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை வழங்க கோரினோம். அதற்கு திருப்திகரமான பதில் தரவில்லை. ஒப்பந்தத்தின் பலன் ஓய்வூதியர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
ஆனால் கடந்த 4 ஒப்பந்தகளாக ஓய்வூதியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.ஓய்வுபெறும் தொழிலாளர்கள் கடந்த 22 மாதங்களாக ஓய்வூக்கால பணப்பலன்களை பெறாமல் வெறும்கையொடு செல்கின்றனர். அந்த தொகையை வழங்குவதற்கான கால நிர்ணயம் செய்ய கோரினோம். அதற்கு பதிலளிக்கவில்லை;
அரசு துறை ஊழியர்களை விட போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளது. போக்குவரத்து ஊழியர்களில் ஜூனியர்களை விட சீனியர்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டை சரி செய்யவில்லை.
இத்தகைய பிரச்சனைகளில் உடன்பாடு ஏற்படாததால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்துள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து அறிவிப்போம்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது எட்டு அரசாணைகள் மூடப்பட்டன இவ்வளவு பிரச்சனைக்கும் அதுவே காரணம்
தேர்தல் வாக்குறுதியில் திமுக தொழிலாளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது ஆனால் போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் அரசு எதுவுமே செய்யவில்லை என்றார்
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறுகையில்
அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 28 தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தை புறக்கணித்துள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் 21.36 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. தற்போது 25 சதவீதம் ஊதிய உயர்வு கேட்டோம். இறுதியில் 21 சதவீதமாவது வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
அதேபோல், 21 மாத நிலுவை தொகையில் 12 மாத நிலுவை தொகை வழங்க முடியாது என்று கூறிவிட்டனர். எஞ்சிய நிலுவை தொகையை நான்கு தவணைகளாக வழங்குவதாக கூறியள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோல் ஊழியர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும். போக்குவரத்து துறையின் பொன்விழா ஆண்டை ஒட்டி 3 சதவீத சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்தோம்.
எதற்குமே தெளிவான பதில் இல்லை. 28 தொழிற் சங்கத்தினரும் கலந்துபேசி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.
என்றார்,
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது,
64 சங்கங்கள் ஏற்றுக்கொண்டன…
பேச்சுவார்த்தையில், 86 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன. ஒவ்வொரு சங்கமும், ஒவ்வொரு விதமான கோரிக்கையை முன்வைத்தார்கள். அந்த கோரிக்கைகளை பரிசீலித்து, பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது. தி.மு.க., ஆட்சி அமைந்து, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 14 மற்றும் 15 ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்த பேச்சுவார்த்தை மூலம் போக்குவரத்து ஊழியர்கள் பயனடைய வாய்ப்புள்ளது. 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுள்ளது. சலவைப்படி, 160 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இரவு பணிப்படி 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், குறைந்தபட்சம், 1420 முதல் அதிகபட்சம் 6460 ரூபாய் கூடுதலாக ஊதியம் பெற இருக்கிறார்கள். நிலுவை தொகை, 4 தவணையாக வழங்கப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், 86 தொழிற் சங்கங்களில், 64 தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டு, கையெழுத்து போட்டுள்ளன.