

கனமழை பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதிலிருந்து 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மழைநீர் பாதிப்பு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை அவர் ஆய்வு செய்தார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மழை நின்ற உடன் மின்சாரம் சீர்செய்யப்பட்டு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் எனவும்,சென்னையில் 66 ஆயிரம் மின் இணைப்புதாரர்களுக்கு மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு 38,000 இணைப்புதாரர்களுக்கு தற்போது வரை மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். நிறுத்தப்பட்ட எஞ்சியிருக்கும் 28 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.
மேலும், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 தினங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுடுதாக தெரிவித்தார். இதுகுறித்த உத்தரவுகள் அந்தந்த மின்சார வாரிய அலுவலகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
