• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

100 நாள் வேலை ஊராட்சி பகுதிகளில் முறைகேடுகள்..,

ByKalamegam Viswanathan

May 16, 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூச்சம்பட்டி ஆண்டிபட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை உறுதி திட்ட செயலாக்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

மேலும் இது தொடர்பாக வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த மாதம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் சங்கீதாவிடம் புகார் மனு அளித்தனர். அதில் என் எம் எம் எஸ் செயலி மூலம் மக்களை நிற்க வைத்து புகைப்படம் எடுத்து அந்தப் புகைப்படத்தை பலமுறை பயன்படுத்தி 100 நாள் வேலை திட்டத்தில் இலட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் அந்த முறை கேட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர்.

புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அளித்த பரிந்துரையின் பேரில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் சில பகுதிகளில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ற இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து வாடிப்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி ஆண்டிபட்டி ஊராட்சி செயலாளர் செல்வம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி பணி மேற்பார்வையாளர் சிவரஞ்சித் ஆகிய இரண்டு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கையை கலெக்டர் சங்கீதா எடுத்துள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போன்று மேலும் சில ஊராட்சிகளில் நடைபெற்று இருப்பதாகவும், ஆகையால் அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.