சர்ச்சையின் பிறப்பிடமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நோக்கத்தோடு சகட்டு மேனிக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மீராமிதுன் பட்டியலின சமூகத்தினரையும் மற்றும் அச்சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் மிகவும் இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசிய சமூகவலைதளத்தில் பதிவிட்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு உள்ளிட்டோர் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மீரா மிதுனை நிச்சயம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது வரும் நிலையில், தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..? ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது ; அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும்..! என தெரிவித்துள்ளது சர்ச்சையை பெரிதாக்கியது.
மீரா மிதுனின் இந்த பேச்சு மீண்டும் தமிழக மக்களை கோபத்தில் ஆழ்த்தியது இவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என காவல்துறை மற்றும் தமிழக அரசை நோக்கி கேள்விகள் எழுந்தது. இந்நிலையில், மீரா மிதுன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார், சென்னை அழைத்து வருகின்றனர்.