கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டுமென்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் கிராம முக்கிய சுவர்களில் கரூர் சம்பவத்திற்கு காரணமான தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சிலர் சுவரொட்டி ஒட்டிய நபரை வீடியோ எடுத்து யார் ஒட்டசொன்னது என கேள்வி எழுப்பி தகராறில் ஈடுபட்டதுடன் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினர்.
அதனை தொடர்ந்து சுவரொட்டி ஒட்டிய வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த பரத்ராஜ் தன்னை மிரட்டியதாக தவெக நிர்வாகிகள் மீது கீழையூர் காவல் நிலையத்தில் 29 ஆம் தேதி இரவு புகார் அளித்திருந்தார். இதனிடையே பரத்ராஜ் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கீற்றுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் பரத்ராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பரத்ராஜை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பவிட்ட கீழையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் உட்பட அக்கட்சியினர் 4 பேர் மீது கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது பரத்ராஜ் புகார் அளித்த நிலையில் கீழையூர் போலீசார் அலட்சியம் காட்டிய நிலையில் பரத்ராஜ் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் தலைமறைவாக உள்ள தமிழக வெற்றிக் கழக கீழையூர் ஒன்றிய செயலாளர் திவாகர் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளை பிடிக்க நாகை டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த பரத் ராஜ் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக செயல்படுவதும், போஸ்டர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.