காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட ‘காலா பாணி’ நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி, விருதுகளை வழங்கி வருகிறது. இதில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் செப்புப் பட்டயங்கள் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான பால சாகித்ய விருது, யுவ புரஸ்கார் விருதுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1801-ம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு ‘காலா பாணி’ எனும் நாவலை எழுதியதற்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் மு.ராஜேந்திரன் மதுரை மாவட்டம் திருமங்கலம்த்திற்கு அருகே வடகரை கிராமத்தில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியமும் சட்டமும் படித்தவர். தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.