சிவகாசி அருகே ஆனைக்குட்டம் பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வெடி சத்தத்துடன் கூடிய அதிர்வு காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் 3 பட்டாசு ஆலைகளில் வெளியான கழிவுகளை அழிப்பதற்காக தீ வைத்த போது ரசாயன கழிவுகள் மற்றும் கழிவு பட்டாசுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது.

விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து நீண்ட நேரமாக பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறிய நிலையில் சிவகாசி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். வழக்கமாக பள்ளம் தோண்டி அதில் கழிவு பட்டாசுகளை கொட்டி கொழுத்தாமல் விதிமுறையை மீறி சமதள பகுதியில் வைத்து பட்டாசு கழிவுகளை கொளுத்தியதே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



