போர் நிறுத்தத்திற்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகளும், வரிகளும் விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசினார்.
அப்போது ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வரும்படி கூறினார். ஆனால், போரை நிறுத்தினால் எதிர்காலத்தில் ரஷியாவின் தாக்குதல் இருக்காது என்பதற்கான உத்தரவாதம் என்ன இருக்கிறது என ஜெலன்ஸ்கி கேள்வி எழுப்பினார் அத்துடன் போரை நிறுத்தும் முடிவில் உக்ரைன் இல்லை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இந்த சூழலில், உக்ரைனுக்கான ராணுவ உதவியை ட்அமெரிக்கா அரசு சமீபத்தில் நிறுத்தியது. அத்துடன் உக்ரைனுக்கு அளித்து வந்த புலனாய்வு தகவலையும் நிறுத்துவது என அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது ரஷ்யாவுக்கு சாதக நிலையை ஏற்படுத்தும் என விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை டிரம்ப் வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்களை நடத்தி வருவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு பகுதியாக புதிதாக பொருளாதார தடைகள், அதிக வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனும், ரஷ்யாவும் இறுதி தீர்வுக்கு வரவில்லையெனில், இந்த தடைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் எச்சரித்து உள்ளார்
அத்துடன் ரஷ்யாவும், உக்ரைனும் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் வலியுறுத்தியுள்ளார். அதில்,, “போர் களத்தில் உக்ரைனுக்கு எதிராக முற்றிலும் ஒரு கடுமையான தாக்குதலை ரஷ்யா தொடுத்து வருகிறது என்ற உண்மையின் அடிப்படையில், ரஷ்யா மீது மிகப் பெரிய அளவிலான பொருளாதார தடைகளையும், வரிகளையும் விதிப்பதென தீவிர பரிசீலனை செய்து வருகிறேன். அமைதி ஏற்படுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இறுதித் தீர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த தடைகள் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.