தமிழகத்தில் தக்காளியின் விலை ஏகபோகமாக உயர்ந்தாலும் கடலூரில் கிலோ 30 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்து மக்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார் காய்கறி வியாபாரி ஒருவர்.
செல்லங்குப்பத்தை சேர்ந்த இளைஞர் ராஜேஷ், அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் தக்காளி கிலோ இன்று 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தனது கடையில் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார் ராஜேஷ். இவரது கடையில் வெங்காயமும் கிலோ 25 ரூபாய்க்கு கிடைக்கிறது. மிகவும் மலிவான விலையில் தக்காளி, வெங்காயம் கிடைப்பதால் அவரது கடைக்கு திரண்டு வரும் மக்கள் போட்டிபோட்டுக்கொண்டு அள்ளி சென்றனர்.
கர்நாடக மாநிலம் கோளாறில் இருந்து தக்காளியையும், பெங்களூருவில் இருந்து வெங்காயத்தையும் கொள்முதல் செய்யும் ராஜேஷ், போக்குவரத்து செலவுகளை சேர்க்காமல் கொள்முதல் விலையிலேயே அவற்றை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார். காய்கறிகளின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கிலேயே வெங்காயம், தக்காளியை குறைந்த விலைக்கு விற்பதாக ராஜேஷ் கூறியுள்ளார். தற்போதைய நிலையில் தனது காய்கறி கிடங்கில் 2 டன் வெங்காயமும், 1 டன் தக்காளியும் இருப்பதாக ராஜேஷ் தெரிவித்துள்ளார். கிடங்கில் உள்ள வெங்காயம், தக்காளியின் இருப்பு தீரும் வரை அவற்றை மலிவு விலையிலேயே விற்பனை செய்ய ராஜேஷ் முடிவு செய்திருக்கிறார்.