சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் வாடிப்பட்டி பகுதிகளில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் நடவு செய்த நெற்கதிர்கள் அறுவடை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்காக ஆங்காங்கே மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் பல்வேறு இடங்களில் குவிந்து கிடப்பதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக அய்யங்கோட்டை கிராமத்தில் கிராம மந்தைக்களம் அரசு பள்ளி மின்வாரிய அலுவலகம் அரசு மருத்துவமனை ஆகிய அத்தியாவசியமான இடங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை குவித்து வைத்துள்ளனர். சுமார் 3000 மூடைகளுக்கு மேல் குவித்து வைக்கப்பட்ட நெல் மணிகள் வெயிலில் காய்ந்து கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கிறது.

பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வெயிலில் காய்ந்து எடை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசு பள்ளி மருத்துவமனை மின்சார வாரியம் போன்ற பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பயன்படுத்தக்கூடிய இடங்களில் தெருக்களில் நெல்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

சாலையோரம் தெருவோரம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு பள்ளி ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றனர் இதேபோல் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகள் அலங்காநல்லூர் வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் அவல நிலை காணப்படுகிறது.

ஆகையால் அரசு உடனடியாக குவிந்து கிடக்கும் நெல்மணிகளை குடோன்களுக்கு கொண்டு செல்ல போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



