தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பள்ளிக் கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், பொது சுகாதாரக் கட்டிடங்கள், உணவுத் தானிய சேமிப்பு கிடங்குகள், ரேஷன் கடை கட்டிடங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட ரூ.6.26 கோடி மதிப்பிலான 20 முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் மருத்துவமனை வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றி புதிய கட்டிடத்தை பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.சிவராமன், ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடேசன், வருவாய் கோட்டாட்சியர் ஆர்.ஷீஜா, ஒன்றிய திமுக செயலாளர்கள் தனசேகர், இரா.மணிமாறன், கணேசன், வருவாய் வட்டாட்சியர் சம்பத், மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் பானுமதி, உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழிரஞ்சித் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










